Home மருத்துவம் Ragi Health Benefits | கேழ்வரகு – பயன்கள்

Ragi Health Benefits | கேழ்வரகு – பயன்கள்

கேழ்வரகின் பயன்கள் |Ragi Health Benefits

கால் நூற்றாண்டிற்கு முன்பு வரை தென்னிந்தியாவில் கேழ்வரகு (ragi) அன்றாடம் எடுத்துக்கொள்ளும் ஒரு முக்கிய உணவாக இருந்ததது. கேழ்வரகின் பூர்வீகம் ஆப்பிரிக்கா என்று ஆய்வாளர்கள் கூறினாலும், நம் நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு முற்றிலும் ஏற்புடைய உணவாக அமைந்ததால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் உணவில் கேழ்வரகை சேர்த்து வருகின்றோம்.

துரித உணவுகள் வருகையால் நாம் மறந்து விட்ட உணவுகளில் ஒன்றாக இன்று மாறிவிட்டது என்பது மிகவும் வேதனையளிக்கின்றது.

காலை உணவு

பொதுவாக நமக்கு காலை உணவு மிக முக்கியம் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவில் பிரதானமாக தானியங்களை எடுக்க விரும்பினால் உங்களின் தேர்வு கேழ்வரகாக இருக்கட்டும்.

காரணம்,மற்ற தானியங்களை விட கேழ்வரகு மிகச் சிறந்தது. நாள் முழுவதும் இயங்க தேவையான சத்துக்களை அளிக்க வல்லது.

மன அழுத்தம், தூக்கமின்மை சீராக…

ராகியில் ட்ரைடோபான் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது உடலுக்கு நல்லது. இது நரம்புகளை அமைதிப்படுத்துகிறது. சிலருக்கு காலையில் எழுந்ததும் ஏற்படும் பதட்டத்தை குறைக்கஉதவுகின்றது. மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.

கேழ்வரகு காலையில் உணவாக எடுத்துக்கொண்டால் அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்கி இறுதி வரை அதை தக்கவைக்கவும் நமக்கு உதவி செய்யும். அனுபவத்தில் நீங்கள் இதை உணர முடியும்.

எலும்புகள் வழுப்பெற…

எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும். கேழ்வரகில் மற்ற சிறுதானியங்களில் இருப்பதை விட அதிக அளவு கால்சியம் உள்ளது.

மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் புரதம், அமினோ அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஆகியவுமே அதிக அளவில் உள்ளன.

வயதானவர்களுக்கு கேழ்வரகின் உதவி

கேழ்வரகில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் அதிகமாக நிறைந்துள்ளது. இது திசுக்களைப் பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் முதுமை தன்மையை தாமதப்படுத்த உதவுகின்றது.

மேலும் அதிக அளவில் உள்ள கால்சியமும் பாஸ்பரசும் முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மானம் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்க ஆரம்ப நிலைகளில் உதவுகின்றது.

இரத்த சோகைக்கு தீர்வு

இரத்த சோகை எனப்படும் குறைவான ஹீமோகுளோபின் அளவு உள்ள மனிதர்களுக்கு அக்காலத்தில் பெரியவர்கள் கேழ்வரகை உணவாக கொடுத்தே சரி செய்துள்ளனர் என்பதை நமது வீட்டு பெரியவர்கள் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். நாள் முழுவதும் முழு ஆற்றலுடன் இயங்க உதவும்.

பெண்களுக்கு..

பிரசவித்த தாய்மார்கள் உணவில் கேழ்வரகை சேர்த்துக்கொண்டால் தாய்பால் சுரப்பது அதிகரிக்கும். எனிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் பிறந்த குழந்தைக்கு 6 மாதம் முதல் கேழ்வரகு கூழ் கொடுப்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி சீராகும். மாதவிடாய் நின்ற பெண்கள் கேழ்வரகை அடிக்கடி எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

நீரழிவு நோயாளிகளுக்கு வரபிரசாதம்

கேழ்வரகின் மேற்புறத் தோலில் பாலிஃபினால்களின் அளவு அரிசி, கோதுமையுடன் ஒப்பிடுகையில் பெருமளவில் காணப்படுகிறது. இதனால் சாப்பிட்ட பின் இரத்தத்தில் சர்க்கரை அளவை விரைவாக ஏற்றாமல் மிக சீராக ஏற்றும் தன்மையுடையது ( Low glycaemic index Food).இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க பெரும் பங்கு வகிக்கின்றது.

இரத்தத்தில் தேவையற்ற கொழுப்பு குறைய…

கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசியுணர்வைத் தடுத்து, எடையை குறைக்க உதவுகிறது. மேலும் உடலில் தேவையற்ற கொழுப்பை(LDL)குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை சீர் செய்வதால் இரத்தத்தின் கொழுப்பு விகிதம் சமநிலை ஏற்பட உதவும். இதனால் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் எடையை பராமறிக்க..

கேழ்வரகில் குறைந்த கலோரிகளே உள்ளன. கொழுப்பு சத்து குறைவு. நார்ச்சத்து அதிகம். புரதச்சத்தும் நிறைந்தது. எனவே நிறைய சக்தி தினசரி கிடைக்கும்.

பசியை கட்டுப்படுத்தும். இதனால் அதிகமாக உணவை சாப்பிட முடியாது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த காலை உணவாக அமையும்.

கேழ்வரகு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது. இருப்பினும் புதிதாக சாப்பிட தொடங்குபவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரின் ஆலேசனையை பெற்றுக்கொள்ளவும்.

கேழ்வரகை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

Exit mobile version